திங்கள், 13 செப்டம்பர், 2010

நகரும் காட்சிகள்..


வழமையான ரயில் பயணங்களில்
நகரும் ரயிலுக்கு வெளியே
எதிர்த் திசையில்
கடந்து போகும் காட்சிகளினூடே
ஏதாவதொன்றில்
லயித்து விடுகிறது மனம்..

கையசைத்துச் செல்லும் சிறுவர்கள்
பால்யத்தை நினைவுபடுத்திப் போகிறார்கள்..

மொட்டை மாடியில் நின்றபடி
குழந்தைக்குச் சோறூட்டும் தாய்
ஏக்கப் பெருமூச்சொன்றை வரவழைக்கிறாள்..

தொலைவில்
சிறகடித்துப் பறக்கும் பறவையொன்று
மனித சுதந்திரத்தை
மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது..

அழகாயிருக்கும் வீடொன்று
யாரோ ஒருவரின்
கனவு நிறைவேறியதன்
குறியீடாய் நிமிர்ந்து நிற்கிறது..

உயர்ந்திருக்கும் மலையொன்று
செருக்கின் மிச்ச சொச்சங்களைச் சிதறடித்து
மண்டியிடச் சொல்கிறது..

உயிர் வீணையின் நரம்புகளில்
சுரம் மீட்டிப் போகின்றன
இவையும் இவையொத்ததுமான காட்சிகள்..

எதிர்வரும் நாளொன்றின்
ஏதாவதொரு நேரத்தில்
ரயிலுக்கு வெளியே காட்சியாகக்கூடும்
யாருக்கேனும் நானும்..

ஆயினும்
காட்சியாவதில் இல்லை;
காண்பதில்தான் இருக்கிறது
களிப்பென்பது..
.
.

2 கருத்துரைகள்:

Ahamed irshad சொன்னது…

நல்லாயிருக்குங்க கவிதை.. இயல்பு

அப்துல் காதர் சொன்னது…

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி..!

Twitter Bird Gadget