ஞாயிறு, 18 டிசம்பர், 2011

நினைவுக் கீறல்கள்

பாலினும் வெளுத்திருக்கும் என் பூனை;
அதன் இடக்கண்ணோ
வானின் நீலத்தை விழுங்கியிருக்கும்..
என்னையறிந்த யாவரும் என் பிள்ளையென்றே
கேலி செய்வர் அதனை;
இல்லையில்லை என்னை..

பூனை வளர்த்தல் பேரின்பமென்று
நான் சொன்னால் நீங்கள் நம்பிட வேண்டும்..
பூனை வளர்த்தல்
உங்கள் இதயத்தை மென்மையாக்குமென்று
நான் சொன்னால் நீங்கள் நம்பிட வேண்டும்..

எத்தனை அறிவு என் பூனைக்கென்று  நானறியேன்
ஆயினும் அடித்துச் சொல்வேன்
மற்றெந்த பூனையை விடவும் கூடுதலென்று..

என் வாழ்வின் கெட்ட நாளொன்றில்
தொலைந்து போனது என் பூனை..
ஏதாவது வண்டியில் அடிபட்டிருக்கக்கூடுமென்று
அச்சமூட்டினாள் அம்மா;
குறவன் குத்திப் போயிருக்கலாமென்று
நெஞ்சில் குத்தினார் எதிர்வீட்டுக்காரர்..
கிடைத்துவிடுமென்று
ஆறுதல் சொல்லவேயில்லை ஒருவரும்..

எதிர்ப்படுவோரிடமெல்லாம்
என் பூனை குறித்து விசாரிக்கும்போது
போலி வருத்தத்தோடு உதட்டைப் பிதுக்கிக் கொண்டிருந்தவர்கள்
கொஞ்ச நாள்களுக்குப் பின்
எரிச்சலோடு முறைக்க ஆரம்பிக்க
விசாரிப்பதை நிறுத்திக் கொண்டேன்..

என் பூனையோடு விளையாடும்
பக்கத்து வீட்டுச் சிறுவன் மட்டும்
என் துக்கத்தில் பங்கு கொண்டு
அவ்வப்போது ஆறுதல் சொல்வான்..

ஒருநாள் சிறுவன்
இன்னொரு பூனை வளர்க்கலாமென்றான்..
மனம் ஒப்பவில்லை..
வெள்ளை நிறத்தில் 
ஒரு கண் மட்டும் நீலமாயிருக்கும் பூனை
எங்கும் கிடைக்காது என்றேன்..
ஆமாமென்று ஆமோதித்தவன்
இப்போதெல்லாம் தன் வீட்டு நாயோடு
விளையாடிக் கொண்டிருக்கிறான்..

அடிக்கடி நீல வானை
அண்ணாந்து பார்த்து இப்போதெல்லாம்
நினைவு கூர்கிறேன் என் பூனையின் இடக்கண்ணை ..

அவ்வப்போது தடவிப் பார்த்துக் கொள்கிறேன்
பூனை என்னோடு விளையாடிய நாள்களில்
அது ஏற்படுத்தியிருந்த நகக்கீறல்களை..
கொஞ்சம் கொஞ்சமாய்
மறைந்து வரும் அவையும்
ஒருநாள்  காணாமல் போய்விடக்கூடும்
எனது பூனையைப் போலவே..!
.
.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

மழைக்கால ஞாயிறு


பொழிந்தது போதுமெனச்
சற்றே ஓய்வெடுத்துக் கொண்டது வானம்..
இன்னும் தாகமெனத்
தவளைகளைத் தூதனுப்பியது பூமி..

இடையறாத இடியின் இரைச்சலில்
இயல்பிழந்தது இரவு..
நாயொன்றின் சோகந்தோய்ந்த முகத்தை
நிழலாடச் செய்தது தொலைவில் அதன் ஓலம்..
தள்ளிப்போன விடியலின் தயவில்
இன்னும் கொஞ்சம் நீண்டது
தடைபட்ட உறக்கம்..

புதிதாய்ச் சமைந்த பெண்ணென
மெல்ல எட்டிப் பார்த்த ஞாயிறு
பின் வெடுக்கென மேகக்கதவுகளின் பின்னே
தன் தலையை இழுத்துக் கொண்டது ..
பரபரப்பில்லாத இந்த மழைநாள் என்னைப்போலவே
ஞாயிற்றுக்கும் ஞாயிறென ஆனது..

வானத்தை வெறித்தபடி
வெறுமையாய்க் கழிந்த இம்மழை ஞாயிற்றில்
கடைசி வரை வெளியே வரவேயில்லை
நானும் ஞாயிறும்!



சனி, 26 நவம்பர், 2011

குறுங்கவிதை


சற்று முன்
நிலவை மறைத்திருந்த மேகம்
விலகிவிட்டது
ஆயினும்
கலங்கியிருக்கிறது குளம்
இப்போது.
.
.

சனி, 5 நவம்பர், 2011

ஆயுதம் கொல்வோம்!



யாரேனும் எங்கேனும்
நாள்தோறும் செத்துக் கொண்டேயிருக்கிறார்கள்
எப்படிச் சாகக்கூடாதோ அப்படி...
இனத்தின் பேரால்
மதத்தின் பேரால்
மொழியின் பேரால்
சாதியின் பேரால்
பட்டினியால்
துரோகத்தால்
அவமானத்தால்
ஏமாற்றத்தால்
வன்மத்தால்
இன்னும் எண்ணற்ற காரணங்களால்..

தேவபானங்கள் அருந்தி
கடவுளர்கள் மயங்கியிருக்கும் வேளைகளில்
இந்தச் சாவுகள் நிகழ்ந்து விடுகின்றன
அல்லது நிகழ்த்தப்படுகின்றன..

பின்னர் மயக்கந் தெளிந்து பதறியடித்து
கடவுளர்கள் விழித்தெழும் வேளைகளில்
சர்வாதிகாரிகள் சிலர் வன்முறையால் சாகடிக்கப்படுகிறார்கள்
சிலர் நாடு கடத்தப்படுகிறார்கள்
இன்னும் சிலர்
தண்டனை என்னும் பேரால்
அரசுகளால் தூக்கிலிடப்படுகிறார்கள்..

அவசர அவசரமாய்க் கூடும் அறிவுஜீவிகள்
பன்னாட்டுத் தொலைக்காட்சிகளில்
கலந்து விவாதிக்கிறார்கள்-
மரண தண்டனை தேவையா இல்லையா என்று..
விவாதங்கள் முற்றுப் பெறுவதற்குள்
நிகழ்ந்துவிடுகின்றன மேலும் சில மரணங்கள்..

ஆயுதங்கள் குவிந்துவிட்ட உலகில்
இரவில் ஆடைகளைக் களைந்து
ஆயுதங்களைத் தரித்தபடி உறங்குகிறார்கள்..
எதிரிகளுடன் சமாதானம் பேசும் வேளைகளில்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை
கமுக்கமாய்த் தடவி உறுதி செய்தபடி
உரக்கப் பேசுகிறார்கள்..

எதிரிகள் தீர்ந்து போன வேளைகளிலும்
ஆயுதங்களில் துருவேறாமல் பாதுகாக்க
சகோதரர்களைக் கொன்று பழகுகிறார்கள்..
காரணம் கேட்டால்
தொன்மங்களைத் துணைக்கழைக்கிறார்கள்..
ஆயுதங்களும் தீர்ந்து போனால்
பின் சொற்களைக் கூர்தீட்டத் தொடங்குகிறார்கள்..

திட்டமிட்டு எல்லாப் பாவங்களையும்
செவ்வனே செய்து முடித்தபின்
பாவச்சிலுவைகளைச் சுமக்க
இன்னொரு இளிச்சவாயனைத் தேடுகிறார்கள்..

எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும்
எதையும் செய்ய வக்கற்றவர்கள்
கவிதைகள் எழுதிப் பரிசு பெறுகிறார்கள்
அல்லது
மேடைகளில் முழங்கிக் கைத்தட்டல் பெறுகிறார்கள்..

படைத்தவன் எனப் போற்றப்படுபவன்
எல்லாவற்றையும் கண்டு மனம் வெம்பியபின்
ஒருநாள் செத்துப் போகக்கூடும்
எப்படிச் சாகக்கூடாதோ அப்படி..!



திசைகளைத் தொலைத்தவன்

.
.
யாரும் முன்னெப்போதும்
பயணித்திராத பாதைகளில் 
பயணித்திடவே எப்போதும் திட்டமிடுகிறேன்..

வெளிச்சத்தின் சுவடுகள் ஏதுமற்ற
இந்த இருள் பாதைகளையே
மீண்டும் மீண்டும் விரும்பித் தேர்கிறேன்..

வழி நடத்தவோ
பின் தொடரவோ யாருமற்ற
கைவிடப்பட்ட இந்தப் பாதைகளில்
வழித்துணை யாருமின்றி
பயணித்துக் கொண்டிருக்கிறேன்..

கொண்டாட்டங்களுடன்
நகர்ந்து கொண்டிருந்தாலும் 
ஒரு பிண ஊர்வலத்தின் துயரங்கள் 
நிறைந்தே  தொடர்கிறது என் பயணம்..

யாரும் இப்பாதைகளில்
என்னைத் தொடர்ந்து துயருறுவதைத் தவிர்க்கவே
தடயங்களை அழித்தபடி
முன்னேறிக் கொண்டிருக்கிறேன்..

இந்தப் பாதைகளின் குறுக்கே
பள்ளத்தாக்கோ பெருமலையோ ஆழ்கடலோ
எதுவும் தடையென எதிர்ப்படலாம்..
எனினும் மாற்றுப்பாதைகளைத் தேர்ந்தெடுத்தபடி
தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்பேன்..

கைவிளக்கேந்திய கருணையாளன் எவனும்
எதிர்ப்படுவான் என்றோ
எனக்கு வழி காட்டுவான் என்றோ
இதுவரை ஆரூடம் சொல்லவில்லை
பட்சிகள் எவையும்..

என்னிடம் நம்பிக்கைகளுமில்லை;
அவநம்பிக்கைகளுமில்லை..
சொல்வதற்கென்றோ
விட்டுச் செல்வதற்கென்றோ எதுவுமில்லை..

திசைகளின் தேவையற்றிருப்பதால்
திசைகளைத் தொலைத்தபின்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது என் பயணம்..

பயணிப்பதைத் தவிர
வேறெதுவாய்  இருக்க முடியும்
ஒரு பயணியின் நோக்கம்..
நான் பயணி என்பதால்
பயணித்தேன்; பயணிக்கிறேன்; இன்னும் பயணிப்பேன்..!
.
.

திங்கள், 24 அக்டோபர், 2011

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..


இதுவரை நான்
காதல் வசப்படவுமில்லை;
காதல்
என் வசப்படவுமில்லை..!
--------------------------------------------
மனுக்கள் இல்லை என்னிடம்
குறையிருக்கிறது;
தீர்க்க வருமா காதல்..?
-------------------------------------------
தடுக்கி விழுமிடமெல்லாம்
கதவுகள்
தட்ட மனமில்லை;
தட்டாமலே திறக்குமா
காதல்..?
------------------------------------------
மயிலிறகு வேண்டுமென்றால்
மயிலிடம் கேட்டுக் கொண்டிருக்க
முடியாதுதான்;
ஆயினும்
வன்முறையில் வருமா காதல்..?
------------------------------------------
செடியிலேயே
காய்ந்து விடுகின்றன
பறிக்கப்படாத
என் தோட்டத்து ரோஜாக்கள்..
------------------------------------------
'அட'
என அசர வைக்கும்
பெண்களைச் சந்திக்க முடிவதேயில்லை
அடுத்த நாள்
ரயில் பயணத்திலும்..
-----------------------------------------
இன்னும்
தற்கொலை செய்து கொள்ளாதது
அதிசயம்தான்;
ஆண் குரல்களையே
கேட்டுக் கொண்டிருக்கும்
என் கைப்பேசி..
.
.

சனி, 10 செப்டம்பர், 2011

குறுங்கவிதைகள்


.
1. அமாவாசை இருட்டு
    எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன 
    மின்மினிப் பூச்சிகள்.

2. பெருமழைக்கு அச்சாரம்
    இச்சிறு தூறலே போதும்
    மண்வாசம்.

3. எப்போது இறங்கியதெனத்  தெரியவில்லை
    நீராடிக் கொண்டிருக்கிறது
    குளத்தில் நிலா.  

4. ஆடைகள் அர்த்தமற்றவை
    அவிழ்த்தெறிகிறேன்
    இளவேனிற்கால நண்பகல்.

5. ஆடைகள் அர்த்தமுள்ளவை
    மேலும் மேலும் அணிகிறேன் 
    முன்பனிக்கால இரவு.

6. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தை
    வேடிக்கை பார்க்கிறது வெளியே 
    நாக்கில் நீர் சொட்டச் சொட்ட தெருநாய்.

7. அழகுப் பெண் 
    அருகில் அழகுக் குழந்தை
    தொலைந்த காமம்.

8. ஊற்றெடுக்கும் கவிதை
    எழுதியே ஆக வேண்டும்  
    மை தீர்ந்த பேனா.

9. ஓய்வைத் தேடும் கால்கள்
    சோராதிருக்கிறது மனம்
    இன்னும் முடியாத பயணம்.
.
.

சனி, 3 செப்டம்பர், 2011

புத்தாயுதம் - வீழ்த்தப்பட்டவனின் அல்லது சரணடைந்தவனின் ஒப்புதல் வாக்குமுலம்




ஒன்று:
கொஞ்ச காலம்
உன்னைத் தொடர்ந்த போதுதான்
அறிந்து கொண்டேன்
உன்னைத் தொடரவேயில்லை என்பதை..  

இரண்டு:
நானெப்படி
உன்னைத் தொடர்வேன்
நீயே விரும்பாதபோது..

மூன்று:
நிறைய மாறிவிட்டேனென்று
எல்லோரும் சொல்லும்போது 
நினைத்துக் கொள்கிறேன் 
உன்னை..

நான்கு:
நீ நிரம்பிய பின்தான் 
காலியானது
என் குடுவை..

ஐந்து:
உன் பிடிக்குள்
சிக்கிய பின்தான் 
தளர்ந்தது என் பிடி..

ஆறு:
எல்லாவற்றையும் பற்றியிருந்தேன்
சுமையாய் இருந்தது;
உன்னைப் பற்றினேன் 
இலேசாயிருக்கிறது..

ஏழு:
எங்கேயோ சிக்கிவிட்டேன்
என்கிறார்கள்;
இப்போதுதான் சுதந்திரமாயிருப்பதை
எப்படிச் சொல்வது..?

எட்டு:
எதிலேயோ வீழ்ந்து விட்டேன் 
என்கிறார்கள்;
எனது எழுச்சியை
எப்படிப் பறைசாற்றுவது..? 

ஒன்பது: 
பத்தாது ஆயுதம் என்றார்கள்;
புத்தாயுதம் இருக்கிறது என்றேன்
புது ஆயுதமா என்றார்கள்;
புத்த ஆயுதம் என்றேன்..!
.
.

சனி, 20 ஆகஸ்ட், 2011

நிலாக்கதைகள்


.
.
குழந்தைகளை
வசீகரிக்க வேண்டுமெனில்
குறைந்தபட்சம் உங்களுக்கொரு
நிலாக்கதை தெரிந்திருக்க வேண்டும்..

பெரும்பாலும்
எல்லா கதைசொல்லிகளும்
தங்கள் களஞ்சியத்தில்
கையிருப்பு வைத்திருக்கிறார்கள்
ஒன்றிரண்டு நிலாக்கதைகளை..

காரணம்
நிலாக்கதை தெரியாத
கதைசொல்லி எவரையும்
அவ்வளவாக விரும்புவதில்லை
குழந்தைகள்..

நிலவற்ற
ஓர் அமாவாசை இரவில்தான்
குழந்தைகளுக்கு முதன் முதலில்
சொல்லப்பட்டிருக்க வேண்டும்
பூதங்களின் கதைகள்..
 
முந்தைய காலங்களைப் போலவே
இப்போதும் குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள்
நிலாக்கதைகளை..

நிலா அழகானது என
அவர்களிடம் சொல்வீர்களேயானால்
அவர்கள் திருப்பிச் சொல்வார்கள்
நிலவின் தேகம் சிதிலமடைந்திருக்கும் கதையை..

நிலாவில் வடை சுடும் பாட்டியின்
கதையைச் சொல்வீர்களேயானால்
அவர்கள் திருப்பிச் சொல்வார்கள்
நிலாவில் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த கதையை..

ஆம்..!
முந்தைய காலங்களைப் போலவே
இப்போதும் குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள்
நிலாவை..
அவர்களின் நிலாவோ
பாறைகளாலானது..
அது நீரற்றது;
காற்றற்றது;
உயிருமற்றது..!
.
.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

பேசிக் கொண்டேயிருக்கிறாய்..



திடீரெனத் தலையில் விழும்
காக்கையின் எச்சத்தைப் போல
அவ்வப்போது எனது சூழ்நிலையின்
சமநிலையைக் குலைத்து விடுகின்றன
உனது கைப்பேசி அழைப்புகள்..

உனதழைப்பு வரும் ஒவ்வொரு முறையும்
பதற்றத்தோடே கையாள வேண்டியிருக்கிறது
எனது கைப்பேசியை..     

நேரில் பேசும் தருணங்களில்
எதையோ சொல்ல வருவதைப் போலவே
பாவனை செய்து
கூட்டிவிடுகிறாய் எனது  எதிர்பார்ப்புகளை..  
கைப்பேசியிலோ வெகு இயல்பாய்ப் பேசி
ஏமாற்றி விடுகிறாய் ஏதுமில்லை என்பது போல்..

ஒருவர் சட்டையை ஒருவர் பற்றியவாறு
சிறுவர்கள் ஓட்டும் ரயில் வண்டியைப் போல
உனது பேச்சைத் தொடர்ந்தவாறே
எனது பேச்சும் இருப்பதால்
தவிடு பொடியாகிப் போகின்றன
எனது முன் ஒத்திகைகள்..  

நண்பர்களுடனான அரட்டைகளின் இடையில்
விலகிச் சென்று உன் அழைப்பை ஏற்கும் நேரங்களில்
விழிகளில் குறும்பு மிளிர
புன்முறுவல் பூக்கிறார்கள்..

பாதி சாப்பிட்ட கையோடு
அவசரமாய் வெளியே வந்து பேசும் சமயங்களில் 
சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறாள்
அம்மா..

நள்ளிரவு தாண்டிய நேரங்களில்  
பேச்சொலி கேட்டு
அறைக்குள் எட்டிப் பார்க்கும் தம்பி
தனக்கு வழி கிடைத்து விட்டதென
நண்பர்களிடம் சொல்லிக் கொள்கிறான்..

இப்படியாக
எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
யாரையோ நான் காதலிக்கிறேனென்று..
நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன்
நீ உன் காதல் சொல்வாயென்று..

பெண்ணே நீயோ
பேசிக் கொண்டேயிருக்கிறாய்
உன் காதலை மறைத்து 
மற்றெல்லாவற்றையும்..!
.
.

சனி, 13 ஆகஸ்ட், 2011

குறுங்கவிதை



பெருங்காற்று
ஆர்ப்பரிக்கிறது மரம்
அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறது
காக்கைக் கூட்டில் 
குயில் குஞ்சு..!
.

ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஓர் இரவு..



இருள் குறைந்த நகரத்தின்
இரைச்சலொழிந்த இவ்விரவில்
தனிமையைத் தின்று கொண்டிருக்கிறேன்
அல்லது
தனிமை என்னைத் தின்று கொண்டிருக்கிறது..

சுவர்க் கடிகாரத்தின் முள் நகரும் ஓசை
பேரிரைச்சலென செவி பிளக்கிறது..
இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சமோ
உச்சி சூரியனென உடலெரிக்கிறது..

அறைக்குள் நுழைந்து
பின் திடுக்கிட்டுத் திரும்பும்
எலிகளும் கரப்பான்களும்
நானின்னும் உறங்காதது குறித்து
எரிச்சலுறுகின்றன..

துயரத்தை யாரிடம்
பகிர்ந்து கொள்வதென யோசித்துக் கொண்டிருக்கையில்
’உச்’ கொட்டியவாறு
தங்கள் இரங்கலைப் பதிவு செய்கின்றன
சுவர்ப்பல்லிகள்..

நேரத்தை நகர்த்தவென
காற்றில் விரல் கொண்டு
நான் வரையும் ஓவியங்கள்
இந்த இரவைப் போலவே
அர்த்தமற்றிருக்கின்றன..

இத்தனை நீளமான
இந்த இரவைச் சபித்தபடி
படுக்கையில் புரள்கையில்
தொலைவில் ஒலிக்கிறது
சேவலொன்றின் கூவல்..

ஒருவழியாய்
இன்னும் சற்றைக்கெல்லாம்
முடிந்து விடும் இவ்விரவு
எனதிந்தக் கவிதையைப் போலவே..!

பின்குறிப்பு:
இரவு உறக்கம் பெரும்பாக்கியம்;
இரவில் உறங்குவோர் பேறு பெற்றோர்..!

(அறிஞர் அண்ணாவின் நாடகத் தலைப்பை இக்கவிதைக்கு நன்றியோடு பயன்படுத்தியிருக்கிறேன்..)

சனி, 16 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..4

.
கவிதை செய்வதென தீர்மானித்தபின்
கை நழுவும் சொற்கள்
வந்து வந்து
கண் சிமிட்டிப் போகின்றன‌
கவிதையைக் கைவிடுவதென தீர்மானித்தபின்..

எனக்கும்
சொற்களுக்குமான‌
இவ்விளையாட்டில்
ஒப்புக்குச் சப்பாணியாய்
விழி பிதுங்கி நிற்கிறது
கவிதை..!
.
.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..3


அடர்ந்த வனங்களின்
நீண்ட இருள்பாதைகளைப் போல்
கவனமாய்க் கடக்க வேண்டியிருக்கிறது
வெகு நேர்த்தியாய் செய்யப்பட்டிருக்கும்
கவிதைகள் சிலவற்றை..


கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..2


.
சொற்களில் இறங்கி
கவிதைகளைத்  தேடுபவர்கள்
சிலவற்றைக் கண்டு கொள்கிறார்கள்..
எஞ்சியவை
மர்மமாய்ப் புன்னகைத்தபடி
மறைவாய் நிற்கின்றன
சொற்களுக்கு வெளியே..
.
.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..1


அடுத்த கவிதைக்கென
தேடிக் கொண்டிருக்கையில்
தோட்டத்துக் குயில்
உதிர்த்துச் செல்கிறது
சொற்கள் சிலவற்றை..

அவற்றைக் கொண்டு
நிலவையெழுத
எத்தனிக்கையில்
அவை பறந்து செல்கின்றன
பட்டாம் பூச்சிகளென..

பின்
உறங்கும் பூனைக்குட்டியின் 
வெதுவெதுப்பான 
தழுவலைச் சொல்ல முயன்று
அதனின்றும்
வெளியேறுகின்றன அச்சொற்கள்..

தோட்டத்துக் குயில்
நிலவு
பட்டாம்பூச்சிகள்
பூனைக்குட்டி
என ஒவ்வொன்றாக
முயன்று தோற்றபின்
இறுதியில்
தன்னையே எழுதிக் கொள்கிறது 
இக்கவிதை..!        
.
.  
    

சனி, 18 ஜூன், 2011

செய்வது இன்னதென அறியாதிருக்கிறாய்..

தெருவோரமாய்க்
குவித்து வைக்கப்பட்டிருக்கும்
மணலைச்
சிதறடித்து விளையாடும்
சிறுவர்களைப் போல 
உன் பார்வையால்
சிதறடித்து விடுகிறாய்
என் கவனம் மொத்தத்தையும்..

சிதறியவற்றைச் சேகரித்து
பின் நான் கட்டும்
மணல் வீடுகளையோ 
அதே சிறுவர்களின் ஆர்வத்தோடு
கலைத்துப் போடுகிறாய்
உன் புன்னகையால் மீண்டும்..

உன் செயல்கள் எதுவாயினும்
சேதமுறுவதென்னவோ 
நானாகவே இருக்கிறேன்..

பா(வம்)வி நீயோ
செய்வது இன்னதென
அறியாதிருக்கிறாய் இன்னும்..!
.
.
            

செவ்வாய், 10 மே, 2011

நான் விரும்பாத கதைகள்..



'ஒரு ஊரில்' எனத் தொடங்கி
குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும்
கதைகளைப் போலில்லை 
உனது கதைகள்..

மாறாக 
ஓலமிடும் ஓநாய்கள்
நிறைந்ததாகவே இருக்கின்றன
அவையெப்போதும்..

ஓநாய்களின்
வாயில் வடியும் குருதியோ
உன்னுடையதாகவே இருக்கிறது 
உன் எல்லாக் கதைகளிலும்..  

உனது கதைகள்
யாருடைய கவனத்தையும்
ஈர்ப்பதற்கென
இட்டுக் கட்டப்பட்டவையல்ல
என்கிறாய்..

மேலும் சொல்கிறாய்
அவை
உனது கண்ணீராலும் குருதியாலும்
எழுதப்பட்டவை என்று..

இறுதியாய்
உன் மீது
இரக்கம் கொள்ளச் செய்வதாகவே
முடிகின்றன
உன் கதைகள் ஒவ்வொன்றும்..

என்றாலும்
நான் விரும்புவதேயில்லை
குழந்தைகள் விரும்பாத
கதையெதையும்..
.
.

சனி, 23 ஏப்ரல், 2011

கற்களும் பூக்களும்..

.
ஒவ்வொன்றாய்ச் சேகரிக்கிறேன்
என் மீது எறியப்பட்ட 
உங்களின் கற்களை..

என் குருதி தோய்ந்திருக்கும்
அவற்றில் சில
சுமந்து வந்திருக்கலாம்
எறியப்பட்டதற்கான நியாயங்களை..
எஞ்சியவை   எறியப்பட்டதற்கான
காரணங்களை நீங்களே அறிவீர்கள்..

சேகரிக்கப்படும் இக்கற்கள் 
உங்கள் மீது
திருப்பி எறிவதற்கல்ல;
இன்னொரு முறை
எவர் மீதேனும்
உங்களால் எறியப்படாமலிருக்க..
 
மேலும்
என் மீது எறியப்படும்
ஒவ்வொரு கல்லுக்கெனவும்     
பூக்களைத் திருப்பியளிக்கிறேன்
உங்களுக்கு..
இருந்தபோதிலும்
தொடர்ந்து நீங்கள்
எறிந்துகொண்டேயிருக்கிறீர்கள்
கற்களை..
நானும் 
வளர்த்துக் கொண்டேயிருக்கிறேன்
என் தோட்டம் நிறைய
பூக்களை..  
.

வியாழன், 10 மார்ச், 2011

உனது சொற்கள்

.
.
எங்கிருந்தும் களவாடப்படாத 
சொற்களைக் கொண்டு 
உனக்கான கவிதையைப் படைத்திருப்பதாய்ப்  
பெருமிதம் கொள்கிறேன்..

முறுவலிப்புடன் 
நீ மறுதலிக்கிறாய்-
அவை உன்னிடமிருந்தே
களவாடப்பட்டவையென்று..

மௌனமாய்
தலை கவிழ்ந்து கொள்கின்றன
என் கவிதையில்
உன் சொற்கள்..!
.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

குறிப்புகளில் அடங்காதிருக்கிறது வாழ்க்கை..


.
எல்லோரும்
துரத்திக் கொண்டிருக்க
தொலைவில் ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்கை..!
 ...................................................................................
வாழ்க்கைக்கு
வெளியே இருக்கிறது
சுதந்திரம்;
சிறைப்பட்டிருக்கிறது வாழ்வு..!  
....................................................................................
ஒரு நதியென
ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்வு-
தாகமற்றிருக்கையில்..
தாகமுற்று
கடைசிச் சொட்டு வரை
பருகிட எத்தனிக்கையில்
அது உறைந்திறுகிப் போகிறது..!
...................................................................................
கிராம நகரங்களில் 
சிறகடிக்கும் வாழ்வு
சமயங்களில் பதுங்கிக் கொள்கிறது
காடு மலைகளில்..!
...................................................................................
நடைவண்டிகளைத் தரும் வாழ்வு
தேவைப்படுவோருக்கு
தரத் தவறுவதில்லை
கைத் தடிகளையும்..!
...................................................................................
தன் வாழ்க்கையை
எழுதுவதாய்த் தொடங்கியவர்கள்
எழுதி முடிக்கிறார்கள் 
பிறர்   வாழ்க்கையை..!
 ..................................................................................
வாழ்க்கை இருக்கிறது
ஏற்கனவே வரையப்பட்டவொரு
புராதன ஓவியமாய்..
காலம்
அதைக் கலைத்துப் போடுகிறது
ஒரு நவீன ஓவியமாய்..!  
...................................................................................
கடைசியில்
வாழ்க்கை என்பதுதான் என்ன?
தெரியவில்லை..
குறிப்புகள் எதிலும்
அடங்காதிருக்கிறது அது..! 
.
.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கனவில் உறங்கியவன்


கைகள் நிறைய பூக்களை ஏந்தியவாறு
அடிக்கடி என் கனவுகளில் வந்து போகிறாள்
சிறுமியொருத்தி..

வழக்கமாய்
பூக்களையெனக்குப் பரிசளித்த பின்
தன் பஞ்சு விரல்களால்
என் விரல்களைப் பற்றியவாறு
இட்டுச் செல்கிறாள்
தன் வீட்டிற்குள் என்னை..

மணலால் கட்டப்பட்டிருக்கிறது
அவள் வீடு..
இன்னதென அறியமுடியாத
வடிவமற்ற கிறுக்கல்களால் நிரம்பியிருக்கின்றன
அதன் சுவர்கள் முழுவதும்..

தன் ஓவியங்களென
அவற்றை அறிமுகப்படுத்தி மகிழ்கிறாள்
சிறுமி என்னிடம்..

வீடெங்கும் இறைந்து கிடக்கும்
பொம்மைகளிலிருந்து
தானே தேர்ந்தெடுத்த
ஒன்றிரண்டை மீளவும் பரிசளிக்கிறாள்
அவளெனக்கு..

களிமண்ணால் செய்யப்பட்டிருக்கும்
அவளது பொம்மைகள்
நான் முன்னெப்போதும் அறிந்திராதவை..

சட்டென நினைவு வந்தவளாய்
மீண்டும் என் விரல்களைப் பற்றியவள்
தன் தோட்டத்தைக் காட்டுவதாய்ச் சொல்லி
அழைத்துச் செல்கிறாள்  என்னை..

வளர்ப்பவரைத் தொடரும் நாயென
நானும் தொடர்கிறேன்  அவளை..

எல்லையற்ற வெளியென
பரந்திருக்கிறது  அவள் தோட்டம்..
கணக்கிலடங்கா
செடிகளும் மரங்களும்
பறவைகளும் விலங்குகளுமாய்
ஒரு வனத்தையும் ஒத்திருக்கிறது  அது..

சிறுமி
வழியெங்கும் எதிர்ப்படும்
பறவைகள் விலங்குகளிடம்
நலம் விசாரித்தபடியே நடக்கிறாள்
அதனதன் மொழிகளில்..

அவ்வப்போது அவள் கன்னங்களில்
முத்தமிட்டுச் செல்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள் சில..

திடீரென மின்னல் வெட்டி மழையடிக்க
என் விரல்களை உதறியவள்
தன் கைகளை நீட்டிச் சுற்றியவாறு
நடனமிடத் துவங்குகிறாள்
மழையில் நனைந்தபடி..

அடர்ந்த மரமொன்றின் அடியிலிருந்து
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஏதும் செய்ய இயலாதவனாய்..

திடீரென பெய்த மழை
திடீரென நின்றும்  போக
சுணங்கிய முகத்துடன்
மீண்டும் என் விரல்களைப் பற்றுகிறாள்
மூன்றாம் முறையாக..

நெடுந்தூரம் வந்துவிட்டதில்
அயர்ந்து அமர்கிறேன் நான்..
அவள்
புன்னகைத்தவாறு அருகமர்ந்து 
என் தலையை வருடுகிறாள் வாஞ்சையுடன்;
தீயணைந்து தணிகிறேன் நான்..

மெல்ல என் தலையை
தன் மடியில் சாய்ப்பவள்
புரியாத மொழிதனில்
பாடலொன்றை இசைக்கவும்  தொடங்குகிறாள்..

சட்டென அரவங்களனைத்தும் அற்றுப் போக
பிரபஞ்சத்தின் ஒற்றைக் குரலாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது அவள் பாடல்..

மரணத்தினும் மேம்பட்ட
உறக்கமொன்றினுள்
வெகு வேகமாய் மூழ்கிக் கொண்டிருக்கும்
அவ்வேளைகளில்
வெகு வேகமாய் வெளியேறிக் கொண்டுமிருக்கிறேன்
இப்பின்னிரவுகளின்   உறக்கத்திலிருந்து..
.
.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

பெயரற்றவன்

.
.
பெயர்கள் இறைந்து கிடக்கும்
தெருக்களெங்கும்
பெயரெதுவுமற்றுத் திரிந்தேன்
பெருமிதத்துடன்..

எப்பெயரிட்டு
எனையழைப்பதென
குழம்பிப் போனவர்கள்
அழைத்து மகிழ்ந்தனர்
ஆளுக்கொரு பெயரிட்டு..

ஆளுக்கொரு பெயரிட்டதில்
அழிந்து போன எனதடையாளத்தால்
அகமகிழ்ந்தேன்; ஆனந்தம் கொண்டேன்..

ஆயினும்
அடையாளச் சிக்கல் வந்த போது
திடுக்கிட்டுப் போனவர்கள்
பின் தீர்மானித்தார்கள்
பொதுப் பெயரிட்டு அழைப்பதென..

இறுதியாய்
'பெயரற்றவன்' என்பதே
பெயராகிப் போனபின்
என் பெருமித கிரீடம்
நொறுங்கிச்  சிதறியது
தெருக்களெங்கும்..!
.
.
Twitter Bird Gadget