ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கனவில் உறங்கியவன்


கைகள் நிறைய பூக்களை ஏந்தியவாறு
அடிக்கடி என் கனவுகளில் வந்து போகிறாள்
சிறுமியொருத்தி..

வழக்கமாய்
பூக்களையெனக்குப் பரிசளித்த பின்
தன் பஞ்சு விரல்களால்
என் விரல்களைப் பற்றியவாறு
இட்டுச் செல்கிறாள்
தன் வீட்டிற்குள் என்னை..

மணலால் கட்டப்பட்டிருக்கிறது
அவள் வீடு..
இன்னதென அறியமுடியாத
வடிவமற்ற கிறுக்கல்களால் நிரம்பியிருக்கின்றன
அதன் சுவர்கள் முழுவதும்..

தன் ஓவியங்களென
அவற்றை அறிமுகப்படுத்தி மகிழ்கிறாள்
சிறுமி என்னிடம்..

வீடெங்கும் இறைந்து கிடக்கும்
பொம்மைகளிலிருந்து
தானே தேர்ந்தெடுத்த
ஒன்றிரண்டை மீளவும் பரிசளிக்கிறாள்
அவளெனக்கு..

களிமண்ணால் செய்யப்பட்டிருக்கும்
அவளது பொம்மைகள்
நான் முன்னெப்போதும் அறிந்திராதவை..

சட்டென நினைவு வந்தவளாய்
மீண்டும் என் விரல்களைப் பற்றியவள்
தன் தோட்டத்தைக் காட்டுவதாய்ச் சொல்லி
அழைத்துச் செல்கிறாள்  என்னை..

வளர்ப்பவரைத் தொடரும் நாயென
நானும் தொடர்கிறேன்  அவளை..

எல்லையற்ற வெளியென
பரந்திருக்கிறது  அவள் தோட்டம்..
கணக்கிலடங்கா
செடிகளும் மரங்களும்
பறவைகளும் விலங்குகளுமாய்
ஒரு வனத்தையும் ஒத்திருக்கிறது  அது..

சிறுமி
வழியெங்கும் எதிர்ப்படும்
பறவைகள் விலங்குகளிடம்
நலம் விசாரித்தபடியே நடக்கிறாள்
அதனதன் மொழிகளில்..

அவ்வப்போது அவள் கன்னங்களில்
முத்தமிட்டுச் செல்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள் சில..

திடீரென மின்னல் வெட்டி மழையடிக்க
என் விரல்களை உதறியவள்
தன் கைகளை நீட்டிச் சுற்றியவாறு
நடனமிடத் துவங்குகிறாள்
மழையில் நனைந்தபடி..

அடர்ந்த மரமொன்றின் அடியிலிருந்து
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஏதும் செய்ய இயலாதவனாய்..

திடீரென பெய்த மழை
திடீரென நின்றும்  போக
சுணங்கிய முகத்துடன்
மீண்டும் என் விரல்களைப் பற்றுகிறாள்
மூன்றாம் முறையாக..

நெடுந்தூரம் வந்துவிட்டதில்
அயர்ந்து அமர்கிறேன் நான்..
அவள்
புன்னகைத்தவாறு அருகமர்ந்து 
என் தலையை வருடுகிறாள் வாஞ்சையுடன்;
தீயணைந்து தணிகிறேன் நான்..

மெல்ல என் தலையை
தன் மடியில் சாய்ப்பவள்
புரியாத மொழிதனில்
பாடலொன்றை இசைக்கவும்  தொடங்குகிறாள்..

சட்டென அரவங்களனைத்தும் அற்றுப் போக
பிரபஞ்சத்தின் ஒற்றைக் குரலாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது அவள் பாடல்..

மரணத்தினும் மேம்பட்ட
உறக்கமொன்றினுள்
வெகு வேகமாய் மூழ்கிக் கொண்டிருக்கும்
அவ்வேளைகளில்
வெகு வேகமாய் வெளியேறிக் கொண்டுமிருக்கிறேன்
இப்பின்னிரவுகளின்   உறக்கத்திலிருந்து..
.
.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

பெயரற்றவன்

.
.
பெயர்கள் இறைந்து கிடக்கும்
தெருக்களெங்கும்
பெயரெதுவுமற்றுத் திரிந்தேன்
பெருமிதத்துடன்..

எப்பெயரிட்டு
எனையழைப்பதென
குழம்பிப் போனவர்கள்
அழைத்து மகிழ்ந்தனர்
ஆளுக்கொரு பெயரிட்டு..

ஆளுக்கொரு பெயரிட்டதில்
அழிந்து போன எனதடையாளத்தால்
அகமகிழ்ந்தேன்; ஆனந்தம் கொண்டேன்..

ஆயினும்
அடையாளச் சிக்கல் வந்த போது
திடுக்கிட்டுப் போனவர்கள்
பின் தீர்மானித்தார்கள்
பொதுப் பெயரிட்டு அழைப்பதென..

இறுதியாய்
'பெயரற்றவன்' என்பதே
பெயராகிப் போனபின்
என் பெருமித கிரீடம்
நொறுங்கிச்  சிதறியது
தெருக்களெங்கும்..!
.
.
Twitter Bird Gadget