செவ்வாய், 10 மே, 2011

நான் விரும்பாத கதைகள்..



'ஒரு ஊரில்' எனத் தொடங்கி
குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும்
கதைகளைப் போலில்லை 
உனது கதைகள்..

மாறாக 
ஓலமிடும் ஓநாய்கள்
நிறைந்ததாகவே இருக்கின்றன
அவையெப்போதும்..

ஓநாய்களின்
வாயில் வடியும் குருதியோ
உன்னுடையதாகவே இருக்கிறது 
உன் எல்லாக் கதைகளிலும்..  

உனது கதைகள்
யாருடைய கவனத்தையும்
ஈர்ப்பதற்கென
இட்டுக் கட்டப்பட்டவையல்ல
என்கிறாய்..

மேலும் சொல்கிறாய்
அவை
உனது கண்ணீராலும் குருதியாலும்
எழுதப்பட்டவை என்று..

இறுதியாய்
உன் மீது
இரக்கம் கொள்ளச் செய்வதாகவே
முடிகின்றன
உன் கதைகள் ஒவ்வொன்றும்..

என்றாலும்
நான் விரும்புவதேயில்லை
குழந்தைகள் விரும்பாத
கதையெதையும்..
.
.

Twitter Bird Gadget