சனி, 20 ஆகஸ்ட், 2011

நிலாக்கதைகள்


.
.
குழந்தைகளை
வசீகரிக்க வேண்டுமெனில்
குறைந்தபட்சம் உங்களுக்கொரு
நிலாக்கதை தெரிந்திருக்க வேண்டும்..

பெரும்பாலும்
எல்லா கதைசொல்லிகளும்
தங்கள் களஞ்சியத்தில்
கையிருப்பு வைத்திருக்கிறார்கள்
ஒன்றிரண்டு நிலாக்கதைகளை..

காரணம்
நிலாக்கதை தெரியாத
கதைசொல்லி எவரையும்
அவ்வளவாக விரும்புவதில்லை
குழந்தைகள்..

நிலவற்ற
ஓர் அமாவாசை இரவில்தான்
குழந்தைகளுக்கு முதன் முதலில்
சொல்லப்பட்டிருக்க வேண்டும்
பூதங்களின் கதைகள்..
 
முந்தைய காலங்களைப் போலவே
இப்போதும் குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள்
நிலாக்கதைகளை..

நிலா அழகானது என
அவர்களிடம் சொல்வீர்களேயானால்
அவர்கள் திருப்பிச் சொல்வார்கள்
நிலவின் தேகம் சிதிலமடைந்திருக்கும் கதையை..

நிலாவில் வடை சுடும் பாட்டியின்
கதையைச் சொல்வீர்களேயானால்
அவர்கள் திருப்பிச் சொல்வார்கள்
நிலாவில் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த கதையை..

ஆம்..!
முந்தைய காலங்களைப் போலவே
இப்போதும் குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள்
நிலாவை..
அவர்களின் நிலாவோ
பாறைகளாலானது..
அது நீரற்றது;
காற்றற்றது;
உயிருமற்றது..!
.
.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

பேசிக் கொண்டேயிருக்கிறாய்..



திடீரெனத் தலையில் விழும்
காக்கையின் எச்சத்தைப் போல
அவ்வப்போது எனது சூழ்நிலையின்
சமநிலையைக் குலைத்து விடுகின்றன
உனது கைப்பேசி அழைப்புகள்..

உனதழைப்பு வரும் ஒவ்வொரு முறையும்
பதற்றத்தோடே கையாள வேண்டியிருக்கிறது
எனது கைப்பேசியை..     

நேரில் பேசும் தருணங்களில்
எதையோ சொல்ல வருவதைப் போலவே
பாவனை செய்து
கூட்டிவிடுகிறாய் எனது  எதிர்பார்ப்புகளை..  
கைப்பேசியிலோ வெகு இயல்பாய்ப் பேசி
ஏமாற்றி விடுகிறாய் ஏதுமில்லை என்பது போல்..

ஒருவர் சட்டையை ஒருவர் பற்றியவாறு
சிறுவர்கள் ஓட்டும் ரயில் வண்டியைப் போல
உனது பேச்சைத் தொடர்ந்தவாறே
எனது பேச்சும் இருப்பதால்
தவிடு பொடியாகிப் போகின்றன
எனது முன் ஒத்திகைகள்..  

நண்பர்களுடனான அரட்டைகளின் இடையில்
விலகிச் சென்று உன் அழைப்பை ஏற்கும் நேரங்களில்
விழிகளில் குறும்பு மிளிர
புன்முறுவல் பூக்கிறார்கள்..

பாதி சாப்பிட்ட கையோடு
அவசரமாய் வெளியே வந்து பேசும் சமயங்களில் 
சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறாள்
அம்மா..

நள்ளிரவு தாண்டிய நேரங்களில்  
பேச்சொலி கேட்டு
அறைக்குள் எட்டிப் பார்க்கும் தம்பி
தனக்கு வழி கிடைத்து விட்டதென
நண்பர்களிடம் சொல்லிக் கொள்கிறான்..

இப்படியாக
எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
யாரையோ நான் காதலிக்கிறேனென்று..
நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன்
நீ உன் காதல் சொல்வாயென்று..

பெண்ணே நீயோ
பேசிக் கொண்டேயிருக்கிறாய்
உன் காதலை மறைத்து 
மற்றெல்லாவற்றையும்..!
.
.

சனி, 13 ஆகஸ்ட், 2011

குறுங்கவிதை



பெருங்காற்று
ஆர்ப்பரிக்கிறது மரம்
அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறது
காக்கைக் கூட்டில் 
குயில் குஞ்சு..!
.
Twitter Bird Gadget