வெள்ளி, 30 மார்ச், 2012

ஓ..மனமே!


பொன்மனமாய் மின்னியதே யொருநாளி லப்போது
வன்மனமாய் புன்மனமா யதுவான திப்போது
நன்மனமாய் மீட்பதுவே பெரும்பா டெனும்போது
அம்மனந்தா னம்மணமா யாவதெப்போது?

சனி, 24 மார்ச், 2012

கேள் நெஞ்சே!

அதுசரி இதுசரி என்பார் நெஞ்சே
எதுசரியென முடிவெடு நீயே!

வருவதும் போவதும் இயல்பென நெஞ்சே
சிரிப்பதும் அழுவதும் கைவிடுவாயே!

இடியொடு மழைவரும் புயல்வரும் நெஞ்சே
நொடியும் கலங்கா திருந்திடுவாயே!

வெளிப்பட புரிபடத் தெரிவதேயில்லை  நெஞ்சே
தெளிந்திட உண்மையைத் தேடிடுவாயே!

அலைந்திடு திரிந்திடு அடிபடு நெஞ்சே
உண்மை உணர்ந்தபின் உய்ந்திடுவாயே!

பெரிதினும் பெரிதது பெண்மை நெஞ்சே
அறிந்துவுன் ஆணவம் அடங்கிடுவாயே!

இறையெது ஏதென  இரைந்திடும் நெஞ்சே
மறைவாய் உள்ளுள் உணர்ந்திடுவாயே!



Twitter Bird Gadget