சனி, 14 ஜூலை, 2012

இயற்கையின் பெருந்துளிகளும் சிறு துரும்பாகிய நானும்..1


1.
பெய்யும் மழையில்
பேனாவை நிரப்பிக் கொண்டு
எழுதத் தொடங்குகிறேன்
வானம்பாடியின்
பாடலொன்றை..

2.
இரவின் அடர்பனியில்
உறைந்து கிடந்த
எனது சொற்கள்
வெயிலவிழ்ந்த விடியலில்
வெடித்துக் கிளம்புகின்றன..

இனி
அவை எதைப் பேசக்கூடும்?
இரவின் அடர்பனியையா?
இளங்காலை வெயிலையா?

3.
பெருநிழல்கள் குறுகுமோர்
உச்சி வெயிற் பொழுதில்
முடிவற்ற துயரமென நீண்டிருக்கும்
யாருமற்ற தார்ச்சாலை மீது
அலை அலையாய் அந்தரத்தில்
நர்த்தனமிடுகிறது கானல்..

எட்டியெட்டித் தொடினும்
கிட்டாதெனத் தெரிந்தும்
துரத்தித் துரத்திக் குதூகலிக்கிறேன்..

கானலின் நடனத்திற்கு
நானொரு தப்புத்தாளம்.

4.
காலை முதல் மாலை வரை
தன் நிறங்களைக் கொண்டு
பூமியை நேர்த்தி செய்யும்
கதிரவன்
மாலையில்
மலைக்குத் திரும்புகிறான்
சோர்வோடும்
எக்கச்சக்கமாய் எஞ்சிவிட்ட
சிவப்பு நிறத்தோடும்..



0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget