சனி, 29 செப்டம்பர், 2012

வீடுகளைக் கனவு காண்பவன்


வீடுகளால் நிரம்பி வழியும்
கனவுகளுக்குச் சொந்தக்காரன் அவன்
வீடுகளைத் தவிர வேறெதையும்
அவன் கனவு காண்பதேயில்லை

அவன் கனவில் வரும் வீடுகள்
நகரத்து மாடி வீடுகளைப் போலவே
யாரும் எளிதில் அணுகமுடியாதவாறு
இரும்புக் கதவுகளோடும் குறைந்த வெளிச்சத்தோடும்
அமானுஷ்யமாய் இருக்கின்றன

மழையும் வெயிலுங்கூட
அவற்றின் ரகசியங்களை அறியமுடியாதவாறு
இறுகச் சாத்தப்பட்டிருக்கும் அவ்வீடுகளைக்
கதவுகளிடமிருந்தும் சாளரங்களிடமிருந்தும்
அவன் விடுவிக்கிறான்

எல்லா அறைகளும் படுக்கையறைகளாகவே
இருக்கும் அவ்வீடுகளில்
அவனோடு படுத்துறங்குவோர் யாவரையும்
அவன் முன்பே அறிந்திருக்கிறான்

கனவில் ஒருநாள் திடீரென மழைபெய்ய
அவன் வேறுவழியில்லாமல்
கதவுகளாலும் சாளரங்களாலும்
மழையின் முகத்தில் ஓங்கி அறைகிறான்

அதிர்ச்சியில்  கனவிலிருந்து வெளியேறிய மழை
யதார்த்தத்தில் நுழைய
திடுக்கிட்டுக் கண்விழித்தவன்
தன் கனவை வாரிச் சுருட்டிக் கொண்டு
ஓரிடம் தேடி ஒதுங்குகிறான்

கனவு வீடுகளில் அவனோடு
படுத்துறங்கியோர் யாவரும்
பக்கத்தில் ஒதுங்கியிருக்க
அவர்கள் அவனைக் கண்டு
புன்முறுவல் பூக்கிறார்கள்

நேரந்தெரியாத அந்த இரவில்
விடாமல் பெய்து கொண்டிருந்த மழையில்
அந்தச் சாலையோர சிறுவனின் கனவு
கொஞ்சம் கொஞ்சமாய்
நமுக்கத் தொடங்குகிறது


ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மகிழ்ச்சியையும் லீப்ஸ்டர் விருதையும் பகிர்ந்து கொள்கிறேன்




இப்படி ஒரு விருது இருப்பதை நேற்றுதான் அறிந்தேன். இவ்விருதை எனக்களித்த தோழர் சிவஹரிக்கு  எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வலையுலகில் கால் பதித்து சுமார் மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இது ஒரு மகிழ்ச்சியான தருணம்தான். அண்மையில் வலைச்சரத்தில் ஆசிரியப் பொறுப்பேற்கும் வாய்ப்புக் கிடைத்தபின் உடனடியாகக் கிடைத்திருக்கும் மற்றொரு வெகுமதியாக இதைக் கருதுகிறேன்.

இனி லீப்ஸ்டர் விருது பற்றி நான் அறிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

லீப்ஸ்டர் விருது எனப்படுவது இளம் வலைப்பதிவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருதாகும். 'லீப்ஸ்டர்' என்பதன் பொருள் 'மனதுக்குப் பிடித்த' என்பதாகும்.

இதன் விதிமுறைகளாவன:

1. முதலில் இவ்விருதை வழங்கியவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

2. இவ்விருதை நகலெடுத்து உங்கள் வலைப்பூவில் ஒட்ட வேண்டும்.

3. பின்னர் இவ்விருதை 200-க்கும் குறைவான பின்தொடர்பவர்களைக் கொண்ட, நீங்கள் தகுதியானவர்கள் எனக் கருதும் ஐந்து  வலைப்பதிவர்களுக்கு வழங்க வேண்டும்.

4. இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவலைத் தொடர்புடைய வலைப்பதிவரின் வலைப்பூவில் பின்னூட்டமிடுவதன் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

இனி நான் பெற்ற இவ்வின்பத்தை என்னைக் கவர்ந்த வலைப்பதிவர்களுக்கு வழங்குகிறேன்.

என்னை மிகவும் கவர்ந்த கவிஞர். அற்புதமான நவீனக் கவிதைகளுக்கும் மரபுக் கவிதைகளுக்கும் சொந்தக்காரர். கவிதையின் பல்வேறு கூறுகளைத் தன் கவிதைகளில் முயன்று பார்ப்பவர். இவர் இந்த விருதுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்தவர். இவ்விருதை இவருக்களிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

2.  கவிதைகள்! - தோழர் அன்புராஜா
உவமை உருவகங்கள் நிறைந்த இவரது கவிதைகள் தொடக்கக் கால புதுக்கவிதைகளை நினைவூட்டக் கூடியவை. உரையாடல்களால் ஆன இவரது சில கவிதைகள் வாசிப்பின்பத்தைத் தூண்டக்கூடியவை. இவருக்கு இவ்விருதையளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

3. இசையின் ஈர இயக்கங்கள் - நித்யவாணி மாணிக்கம்
மற்ற வலைப்பூக்களிலிருந்து வேறுபட்டிருக்கும் இவரது வலைப்பூ இசைக்கோலங்களால் நிரம்பியிருக்கிறது. இசையின் பல்வேறு கூறுகளைப் பற்றியும் இசைக்கலைஞர்களைப் பற்றியும் பல அரிய தகவல்கள் இவரது வலைப்பூவில் மிகுந்து கிடக்கின்றன. இவருக்கு இவ்விருதை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

4. கோடங்கி - இக்பால் செல்வன்
காரசாரமாக இருக்கிறது இவரது வலைப்பூ. சிந்தனையைத் தூண்டும் இவரது பதிவுகள் வரவேற்கப்பட வேண்டியவை. இவருக்கு இவ்விருதையளிப்பதில் உவகையடைகிறேன்.

5. பெண் என்னும் புதுமை - கோவை மு.சரளா
இவரது வலைப்பூ தத்துவார்த்தமாகவும் கவித்துவமாகவும் இருக்கிறது. வாசிப்பதற்கு நிறைய இருக்கின்றன இவரது வலைப்பூவில். இவருக்கும் இவ்விருதையளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!



Twitter Bird Gadget