ஞாயிறு, 13 அக்டோபர், 2013

செத்த நதிகளை அல்லது துயரங்களைச் சேகரிப்பவன்


செத்துப் போன நதிகளைச்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன்
இப்போதைக்கு அது என்
பொழுது போக்காயிருக்கிறது

பழங்கால நாணயங்களைப் போலவோ
புராதன ஓவியங்களைப் போலவோ
அல்லாமல்
வெகு எளிதாய் இருக்கிறது
செத்த நதிகளைச் சேகரிப்பது..

பிச்சைக்காரனின் தட்டில் கிடக்கும்
சில்லறைகளைப் போல
கொஞ்சமே கொஞ்சம் நீருடன்
குற்றுயிரும் குலையுயிருமாய்க்
கிடக்கும் நதிகளைக் கவனமாய்க்
குறித்து வைத்துக் கொள்கிறேன்;
என் எதிர்காலச் சேகரிப்பில்
அவை ஒரு நாள் வந்து சேரும்

செத்த நதிகளின் சேகரிப்பில்
என் சாதனை பேசப்படுமொரு நாளில்
கடற்கரையில் நின்றபடி
கடலை நோக்கிக் கேட்பேன்:
'உன்னிடம் திரும்பி வராத
நதிகள் குறித்து நீ அறிந்திருக்கிறாயா?' என்று;
'செத்துப்போன நதிகளின் ஆன்மாக்கள்
அலைந்து திரியும் தடங்களை
உன் நெடிய மணல்வெளியெங்கும்
நீ கண்டிருக்கிறாயா?' என்று

பின்னர்
ஆற்றவொணா ஆத்திரத்தில்
கடல் என்னை மூழ்கடித்து விடக் கூடும்
அல்லது
பெருந்துயரத்தில் அது வற்றிவிடக் கூடும்


ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஈரமிருந்தால்..



மழைக்காலக் காளான்களாய்
உன் கவனம் ஈர்க்க முயன்று
தோற்றுப் போகிறேன்

வெகு அலட்சியமாய்க்
கடந்து போகிறாய்
உன் கண்களால் என்னை..

இந்த மழைக்காலம் போனாலென்ன?
இன்னும் உயிர்த்திருப்பேன்
ஈரம் எஞ்சியிருக்கும் வரை

ஈரமிருந்தால்
நீயும் கொஞ்சம் இடங்கொடு;
உயிர்த்திருப்பேன்
உன் நெஞ்சத்திலும்..


ஞாயிறு, 23 ஜூன், 2013

முன்னொரு நாளில் நீ ஆறாய் இருந்தாய்


மெல்ல என் நிலம் விழுங்கி
முன்னேறிக் கொண்டிருக்கிறது
உன் கடல்

என் நிலமெங்கும்
ஒரு நோய் போலப் பற்றிப் பரவுகிறது
உன் உவர்ப்பின் நஞ்சு

மெதுவாய்த் தன் செழுமையிழந்து
மூர்ச்சையடையும் என் நிலம்
தனக்குள் தன்னைப் புதைத்துக் கொள்கிறது

முன்னொரு நாளில்
நீ ஆறாய் இருந்தபோது
உன் நீர்மையில் என் நிலம் உயிர்த்திருந்தது;
உன் தழுவலில் அது
பசுமையாய்ப் பூரித்திருந்தது

இன்று
உன் அபரிமிதமான உவர்ப்புக்கும்
வன்மம் மிகுந்த ஆர்ப்பரிப்புக்கும்
நானே காரணம் என்கிறாய்

உன் குற்றச்சாட்டில் திடுக்கிட்ட நான்
கண்களில் கண்ணீரைத் தேக்கி
உன் முன் மண்டியிட்டபடி
அது குறித்து ஏதும் தெரியாதென்கிறேன்

என் கண்ணீர்த் துளிகள்
உன் கடலில் எந்தச் சலனத்தையும்
ஏற்படுத்தாது போகவே
நான் அறிந்து கொண்டேன்
ஆறுகளால் ஆனதுதான் கடல் என்றாலும்
ஆறும் கடலும் வேறு வேறு என்பதை..


சனி, 15 ஜூன், 2013

கவிஞனைக் கொல்லும் கவிதைகள்


நானொன்று நினைக்க
என் கவிதைகள்
வேறொன்றை எழுதிச் செல்கின்றன

என் சொற்படி கேளாத
இக்கவிதைகளின் மீது
பெரும் வன்மம் கொண்டிருக்கிறேன்

இந்த இரவின் முடிவில்
நாளை அதிகாலையில்
என் கவிதைகளைக் கொன்று விடுவதெனத் தீர்மானித்து
திட்டங்களைத் தீட்டியபடி
உறங்கிப் போகிறேன்

அதிகாலையில்
என் பிணத்தின் மீது குதித்தபடி
என் கவிதைகள் அறிவிக்கின்றன
கவிஞன் இறந்து விட்டானென..



ஞாயிறு, 12 மே, 2013

இனி இந்தச் சிறகுகளும் வானமும் என்னுடையவை..


நான் என் நிலமெங்கும் நடந்து
சோர்ந்திருந்தேன்;
நீ உன் சிறகுகள் விரித்து
வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தாய்.

ஒருநாள் நிலமிறங்கிய நீ
உன் சிறகுகளின் பெருமிதம்
குறித்துப் பேசினாய்;
நான் என் கால்களின் துயரத்தை
உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்.

எனக்காக இரங்கிய நீ
என் கால்களைப் பெற்றுக் கொண்டு
உன் சிறகுகளை எனக்கணிவித்து
உன் வானத்தை ஒரு முறை
சுற்றிவரச் சொன்னாய்.

நன்றிப் பெருக்கோடும்
பெருமகிழ்வோடும்
நிலம் விட்டு வானேகினேன்.

ஒரு சுற்று முடிந்தும்
நான் நிற்கவில்லை
பெருந்தன்மையோடு நீ
இன்னொரு சுற்றுக்கும் அனுமதித்தாய்.

வானமறிந்த நான்
பின்னர் நிலமிறங்க மறுக்க
நீ உன் சிறகுகளுக்காக
மன்றாடிக் கதறத் தொடங்கினாய்.

உன் கதறல்
வானமெங்கும் எதிரொலித்த
அவ்வேளையில்
அவ்வானம் என் வசமாகியிருந்தது.


வியாழன், 11 ஏப்ரல், 2013

என் காட்டில் அலையுமொரு வண்ணத்துப்பூச்சி


அங்கிங்கெனாதபடி
என் காடெங்கும் பறந்து திரிகிறாய்
ஒரு வண்ணத்துப் பூச்சியென..

உன் சிறகுகள்
உதிர்க்கும் வண்ணங்களில்
தன் இருளைத் தொலைத்து
மிளிர்கிறதென் காடு

நீ அமர்ந்துண்ணும்
ஒவ்வொரு துளித்தேனும்
கனிந்த எனதன்பின்
சாறென்பதை
நீ அறிந்திருக்கிறாயா?

ஒரு சிறுவனைப் போல்
ஓயாதுன்னைத் தேடியலைகிறேன்
நீ தென்படாப் பொழுதுகளில்
என் காட்டில்
நானே திக்கின்றித் தவிக்கிறேன்

முடிவற்றதென் காடு;
அவ்வாறே
உன் பறத்தலும்
என் தேடலும்..


Twitter Bird Gadget