ஞாயிறு, 23 ஜூன், 2013

முன்னொரு நாளில் நீ ஆறாய் இருந்தாய்


மெல்ல என் நிலம் விழுங்கி
முன்னேறிக் கொண்டிருக்கிறது
உன் கடல்

என் நிலமெங்கும்
ஒரு நோய் போலப் பற்றிப் பரவுகிறது
உன் உவர்ப்பின் நஞ்சு

மெதுவாய்த் தன் செழுமையிழந்து
மூர்ச்சையடையும் என் நிலம்
தனக்குள் தன்னைப் புதைத்துக் கொள்கிறது

முன்னொரு நாளில்
நீ ஆறாய் இருந்தபோது
உன் நீர்மையில் என் நிலம் உயிர்த்திருந்தது;
உன் தழுவலில் அது
பசுமையாய்ப் பூரித்திருந்தது

இன்று
உன் அபரிமிதமான உவர்ப்புக்கும்
வன்மம் மிகுந்த ஆர்ப்பரிப்புக்கும்
நானே காரணம் என்கிறாய்

உன் குற்றச்சாட்டில் திடுக்கிட்ட நான்
கண்களில் கண்ணீரைத் தேக்கி
உன் முன் மண்டியிட்டபடி
அது குறித்து ஏதும் தெரியாதென்கிறேன்

என் கண்ணீர்த் துளிகள்
உன் கடலில் எந்தச் சலனத்தையும்
ஏற்படுத்தாது போகவே
நான் அறிந்து கொண்டேன்
ஆறுகளால் ஆனதுதான் கடல் என்றாலும்
ஆறும் கடலும் வேறு வேறு என்பதை..


2 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒப்பிட்ட விதம் பிரமாதம்... வாழ்த்துக்கள்...

அப்துல் காதர் சொன்னது…

கருத்துக்கு நன்றிங்க!

Twitter Bird Gadget